கோவை ஈஷா யோகா மையத்துக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் , ரூ.22 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கியது.
என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை ஈஷா யோக மையத்துக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டுக்காக ரூ.22 லட்சம் மதிப்பில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த இயந்திரம் மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், என்எல்சி இந்தியா மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் ஆகியோர் முன்னிலையில், என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா குத்து விளக்கேற்றி சுத்திகரிப்பு இயந்திரத்தை தொடக்கி வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது: என்எல்சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப் பணிகளில், விவசாயத்துக்கும், குடிநீர் வழங்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற வசதிகளை ஏற்கெனவே நெய்வேலி, வில்லுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், பூரி ஜெகந்நாதர் கோயில்களில் ஏற்படுத்தியுள்ளது. அடுத்தக்கட்டமாக, அனைத்து மத புண்ணியத் தலங்களுக்கும் வழங்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன், பொது மேலாளர் எஸ்.ஆர்.சேகர், தலைமை மேலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.