கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் அரசுப் பேருந்துக்கு நள்ளிரவில் தீ வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து தினமும் இரவு 9.30 மணியளவில் குறிஞ்சிப்பாடிக்கு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்து குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் இரவில் நிறுத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பண்ருட்டிக்கு வருவது வழக்கம்.
அதன்படி, திங்கள்கிழமை இரவு குறிஞ்சிப்பாடிக்கு நகரப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருநாவுக்கரசு ஓட்டிச் சென்றார். நடத்துநராக பரசுராமன் பணியில் இருந்தார்.
இரவு 10.30 மணியளவில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர், நடத்துநர் இருவரும் ஓய்வெடுத்தனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் டயர் எரியும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து விழித்தெழுந்த நடத்துநரும், ஓட்டுநரும் பேருந்தின் பின்புற டயர் எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், இருவரும் விரைந்து செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயைக் கட்டுப்படுத்தினர்.
பின்னர், அந்தப் பேருந்தை பண்ருட்டி பணிமனைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து, நெய்வேலி டிஎஸ்பி வெங்கடேசன் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
அதில், மர்ம நபர்கள் பேருந்தின் சக்கரத்தில் தீயிட்டு தப்பியது தெரிய வந்தது.
சம்பவத்தையடுத்து, டிஐஜி சந்தோஷ்குமார் பண்ருட்டி பணிமனைக்கு வந்து, தீவைக்கப்பட்ட பேருந்தை பார்வையிட்டு காவல் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, மாவட்ட எஸ்.பி. செ.விஜயகுமாரும் இந்தப் பேருந்தைப் பார்வையிட்டு, கிளை மேலாளர் ஆர்.பாஸ்கரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.