பண்ருட்டி போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, பண்ருட்டி நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.செல்வம் தலைமை வகித்தார். பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் -2 ஜி.கணேஷ் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். காவல் ஆய்வாளர் ஆரோக்யராஜ், உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் தொடங்கிய இந்தப் பேரணியில், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, ஜான்டூயி, முத்தையர் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை முழங்கியபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நான்கு முனைச் சந்திப்பை அடைந்தனர். அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் எஸ்.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.