கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிறந்தது முதல் 6 வயது வரையிலான மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சைளிக்கும் வகையில், நடமாடும் வாகனப் பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் சிகிச்சை வாகனத்தில் இயன்முறை சிகிச்சை, உதவி உபகரண கருவிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவை அதிகரிக்கும் வகையிலான பொருள்கள் இருக்கும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கால பயிற்சி மையங்களுக்கு வர இயலாத மாற்றுத் திறனாளி குழந்தைகளின் இடங்களுக்குச் சென்று அவர்களை மதிப்பீடு செய்வதற்கும், பயிற்சிகளை வழங்கிடவும் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள 14 வட்டங்களுக்கும் அந்தந்த வட்ட வள மையங்களில் வாரம் இரண்டு நாள்கள் (செவ்வாய், வியாழக்கிழமை) நடமாடும் சிகிச்சை வாகனங்கள் சென்று வரும்.
அதன்படி, வியாழக்கிழமை (ஜூன் 14) கடலூர், ஜூன் 19 -ஆம் தேதி சிதம்பரம், 21 -ஆம் தேதி அண்ணாகிராமம், 26 -ஆம் தேதி நல்லூர், 28- ஆம் தேதி பண்ருட்டி, ஜூலை 3- ஆம் தேதி காட்டுமன்னார் கோவில், 5- ஆம் தேதி பரங்கிப்பேட்டை, 10 -ஆம் தேதி விருத்தாசலம், 12- ஆம் தேதி குறிஞ்சிப்பாடி, 17- ஆம் தேதி கம்மாபுரம், 19- ஆம் தேதி கீரப்பாளையம், 24- ஆம் தேதி குமராட்சி, 26 -ஆம் தேதி புவனகிரி, 31- ஆம் தேதி மங்களூர் ஆகிய இடங்களில் இந்த வாகன முகாம் நடைபெறுகிறது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.