விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி, அதிகாரிகளை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரில் ஊராட்சிக்குச் சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் சமுதாய நலக் கூடம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், காலி மனையை ஆக்கிரமித்து வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியினர் விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷிணி சந்திராவை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அதன்பேரில் வியாழக்கிழமை விருத்தாசலம் வட்டாட்சியர் ஸ்ரீதர், ஆதிதிராவிட நலத் துறை வட்டாட்சியர் ரத்தினாவதி ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள், ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது குறித்து முறையிட்டனர். இதையடுத்து, ஓரிரு நாள்களில் இது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் கூறினர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், வருவாய்த் துறையினரை முற்றுகையிட்டு, பிரச்னை தொடர்பாக உடனடியாக முடிவுசெய்ய வேண்டும் என்றனர். காலம் தாழ்த்தினால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறினர்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய இடத்தை அளவீடு செய்த வருவாய்த் துறையினர், அந்த இடம் ஊராட்சிக்குச் சொந்தமானது எனவும், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது எனக் கூறிவிட்டுச் சென்றனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்துசென்றனர்.