வடலூரை புனித நகரமாக அறிவிக்க வேண்டும் என தமிழக ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மேட்டுக்குப்பம் புலவர் ஞானதுரை தலைமை வகித்தார். பார்வதிபுரம் எம்.கே.பார்த்திபன் வரவேற்றார். குரு.பக்கிரிசாமி, வடக்கு மேலூர் கோதண்டன், செந்தில்முருகன், சென்னை மகாதேவன், கருங்குழி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் ஜெய.அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், வள்ளலார் வாழ்ந்த வடலூர், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் பகுதிகளில் உள்ள மது, மாமிசக் கடைகளை நிரந்தரமாக அகற்றி வடலூரை புனித நகரமாக அறிவிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற ஜூலை 27-ஆம் தேதி வடலூர் சத்திய ஞானசபை திடலில் இருந்து நடைபயணம் தொடங்குவது, தொடர்ந்து ஆக.8-ஆம் தேதி சென்னையை அடைந்து தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.
சீனு.ஜோதிராமலிங்கம் நன்றி கூறினார்.