சிதம்பரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 9 ஆட்டோக்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆர்.இளமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.செல்வம் ஆகியோர் வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி தகுதிச் சான்றிதழ், அனுமதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் நகரின் நான்கு முக்கிய விதிகள், தேரடிபிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
அப்போது தகுதிச் சான்றிதழ், அனுமதிச் சீட்டு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதாக 9 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், குழந்தைகளை அதிகளவில் ஏற்றிச் சென்ற ஆட்டோ ஒட்டுநரை எச்சரித்து அனுப்பினர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.