விருத்தாசலத்தில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து அந்தப் பகுதி பெண்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் நகராட்சி, 22-ஆவது வார்டுக்கு உள்பட்டது நேரு வீதி. இங்குள்ள மக்களுக்கு நகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், அதை பருகுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்பட்டு வருகிறதாம்.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பெண்கள் திரளானோர் செவ்வாய்க்கிழமை நேரு வீதியில் காலிக் குடங்களுடன் திரண்டனர்.
பின்னர், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரியும் முழக்கமிட்டனர்.
தகவலறிந்த நகராட்சியினர் மற்றும் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.