சாராய வியாபாரி ஒருவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மணமல்லி மற்றும் காவலர்கள் கொரக்கவாடியில் கடந்த 4-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சுரேஷ் (38) என்பவர் பதிவு எண் இல்லாத மொபட்டில் 110 லிட்டர் சாராயம் கடத்திச் சென்றபோது கைதுசெய்யப்பட்டு, விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது விருத்தாசலம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் 6 வழக்குகளும், ராமநத்தம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
எனவே, இவரது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்திட மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார். அதன்பேரில், சுரேஷை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டிற்கு சிறையில் அடைப்பதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி வழங்கினார். இதையடுத்து, சுரேஷ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது சகோதரர் மூக்கன் என்பவரும் சாராயம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.