என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தில் 47-ஆவது தேசியப் பாதுகாப்பு தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தலைமை வகித்த அனல் மின் நிலையங்களின் தலைமைப் பொது மேலாளர் டி.வெங்கடசுப்பையா பேசுகையில், தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். தமிழக அரசின் கடலூர் மண்டல தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆர்.ராஜசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் பணியாற்றிய 54 தொழிலாளர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இன்கோசர்வ் சங்க உறுப்பினர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல் அனல் மின் நிலையப் பொது மேலாளர் எம்.சேரன், இயக்கம் மற்றும் பராமரிப்புத் துறை பொது மேலாளர் எம்.கனகலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எஸ்.கிருபாசந்தர் மது, புகையிலையின் தீமைகள் குறித்தும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய சீர்திருத்தம் குறித்தும் பாடல்களைப் பாடினார்.
முதல் அனல் மின் நிலைய பாதுகாப்பு அதிகாரி சி.வி.ரகுநாதன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பாதுகாப்பு அதிகாரி வி.சம்பத்குமார் நன்றி கூறினார்.