சத்துணவு உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணல் ஓராண்டுக்குப் பிறகு, கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 598 சத்துணவு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இப்பணியிடங்களுக்கு சுமார் 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
அவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்த ஓராண்டாக நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்பணியிடத்திற்கான நேர்காணல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது.
ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வீதம் சுமார் 2 ஆயிரம் பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.
நேர்காணல் நடத்தப்பட்ட ஓராண்டுக்குள் பணி வழங்கப்படவில்லையெனில் அப்பணியிடத்துக்கு புதிதாக அறிவிப்பு வெளியிட்ட பிறகே, நேர்காணல் நடத்தப்பட வேண்டும். எனினும், தற்போது சத்துணவுத் துறையில் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேர்க்காணலில் பெற்ற மதிப்பெண்கள் ஆராயப்பட்டு தகுதியானவர்களை விரைவில் நியமிப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.