முந்திரி அறுவடைக் காலம் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை செய்வதற்காக மூங்கில் கழிகளை புதன்கிழமை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
பண்ருட்டி நகரின் கெடிலம் ஆற்றுக்கு தென் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் முந்திரி காடுகள் உள்ளன. தரை முதல் உச்சி வரை அடர்ந்து, படர்ந்து காணப்படும் முந்திரி மரங்கள் அரை நூற்றாண்டுகளைக் கடந்து பலன் அளிக்கும் தன்மை கொண்டவை.
தை, மாசி மாதங்களில் பூவெடுத்து, சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடைக்கு வரும். முந்திரி பழங்களை வாங்கு (சொரடு) கொண்டு அறுவடை செய்வது வழக்கம்.
நிகழாண்டு போதுமான மழைப் பொழிவு இருந்ததால் முந்திரி மரங்கள் பூத்து காய் காய்த்துள்ளன. தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. நன்கு வளர்ந்த நாட்டு முந்திரி மரங்கள் சுமார் 30 அடி உயரமும், வீரிய ரக ஒட்டு ரகங்கள் சுமார் 15 அடி உயரம் இருக்குமாம்.
இந்த நிலையில், காடாம்புலியூரில் முந்திரி அறுவடை செய்வதற்கான மூங்கில் கழிகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. சுமார் 20 அடி நீளம் கொண்ட கழி ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்தக் கழிகளை புதன்கிழமை முந்திரி விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.