கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் கடலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்காலிக தீர்வாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனைத்து அரசு மருத்துவர்களும் அதிக அளவில் பயனடையும் வகையில் சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். நிரந்தர தீர்வாக அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தனி சட்டத்தை வருகிற சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
சமூக நீதிக்கெதிரான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபர் குழு மூலமாக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், நிர்வாகப்படி, பிற ஊதியப் படிகளை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, வியாழக்கிழமை மாலை கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில முதுநிலை மருத்துவர்கள் சங்கச் செயலர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சத்தியராஜ் வரவேற்றார். மருத்துவர்கள் ராஜ்விஜய், ராஜசேகர், ராம்சங்கர், செüந்தரராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.