லாரி மோதியதில் மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திட்டக்குடி அருகே உள்ள கீழ்செருவாய் பகுதியைச் சேர்ந்த சேரவேந்தன் மகன் முருகானந்தம் (21). பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வியியல் முதலாமாண்டு படித்து வந்தார். வியாழக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கனகசபை மகன் செந்தில்ராஜா (22) என்பவருடன் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார்.
திட்டக்குடி-தொழுதூர் சாலையில் தி.இளமங்கலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த செந்தில்ராஜா திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, அவரது சகோதரர் சே.தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் திட்டிக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மு.ராஜி (42) என்பவரை கைது செய்தனர்.