வடக்குவெள்ளூர் கிராமத்தில் மதுக் கடை திறக்க கிராம மக்கள் வெள்ளிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்ததால், கடை திறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர்.
நெய்வேலி, மந்தாரக்குப்பம் அருகே உள்ளது வடக்குவெள்ளூர் கிராமம். இங்குள்ள ஒரு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க வருவாய்த் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கிராம மக்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து மதுக் கடை திறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர்.