குடிநீர் பிரச்னையைக் கண்டித்து, திட்டக்குடி அருகே பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி அருகே உள்ள ஆதமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்டது சாத்தநத்தம் கிராமம். இந்தக் கிராமத்தின் தெற்கு காலனி பகுதியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக இந்தப் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். தட்டுப்பாடான நிலையிலேயே குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் உப்பு நீரையே பயன்படுத்தி வருகின்றனராம்.
இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், வெறுப்புற்ற பொதுமக்கள் வியாழக்கிழமை ஆவினங்குடி- நாவலூர் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அளித்த உறுதியை ஏற்று பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.