நத்தவெளிச்சாலையில் அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
திருப்பாதிரிபுலியூர் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே உள்ள நத்தவெளிச்சாலையில் சுமார் 100 குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்தச் சாலையை இரு
வழிச் சாலையாக மாற்றும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத் துறை மூலமாக இந்தப் பகுதியில் குடியிருப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட முயன்றனர். இதற்கு அந்தப் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 40 ஆண்டுகளாக அரசு இடத்தில் வசித்து வரும் ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இதற்காக, திருமானிக்குழியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, அரிசிபெரியாங்குப்பத்தில் உள்ள அரசு நிலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தினர்.