கடலூர் மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கடலூர் மண்டலத்தில் 55 கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மகளிருக்கான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஓபிஆர் கல்வி நிறுவனத்தைச் சார்ந்த வள்ளலார் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் இ.எழிலரசி, பி.பிருந்தா, பி.மணிமொழி, எம்.மகாலட்சுமி ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா வள்ளலார் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.செல்வராஜ் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சு.கவிதாதேவி, உடல் கல்வி இயக்குநர் ஆர்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.