மேலை நாட்டவரை விட உடல் பருமன் நோயால் இந்தியர்களுக்கு தான் அதிக பாதிப்பு என ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனையில் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை துறை மற்றும் இந்திய உடல் பருமன் அறுவைச் சிகிச்சை சங்கம் இணைந்து நடத்தும் உடல் எடை (உடல் பருமன்) குறைப்பதற்கான அறுவைச் சிகிச்சை பற்றிய இரண்டு நாள் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பிஜூ பொட்டக்கட் வரவேற்றார். கருத்தரங்கை தொடங்கி வைத்து இயக்குநர் பரிஜா பேசியதாவது:
தற்போது உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிகளவில் நடக்கிறது. இதனால், செல்வந்தர்களுக்கு பலன் அதிகம் கிடைக்கிறது. ஏழைகளுக்கு இந்த சிகிச்சையின் பலன் மலிவு கட்டணத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். வர்த்தக நோக்கில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதை குறைக்கும் வகையில் ஜிப்மர் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
உடல் பருமனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உடற்பயிற்சியின்மை, சரியான உணவுப் பழக்கம் இன்மை, மன அழுத்தம், கொழுப்புச்சத்து போன்றவற்றால் உடல்பருமன் நோய் ஏற்படுகிறது. மேலைநாட்டவரை விட இந்தியர்களின் உடல் அமைப்பு மாறுபட்டது. இடுப்புப் பகுதியில் அதிகமாக தசை சேர்வதால் உடல்பருமானால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியர்களுக்கு அதிகம். உடல்பருமனை குறைப்பதற்கான அறுவைச் சிகிச்சையை தொடங்கி உள்ள ஒரு சில அரசு மருத்துவமனைகளில் ஜிப்மரும் ஒன்று என்றார் பரிஜா.
மருத்துவக் கண்காணிப்பாளர் ஜெ.பாலச்சந்தர், உடல் பருமான அறுவைச் சிகிச்சை சங்கத் துணைத் தலைவர் அருண்பிரசாத் வாழ்த்திப் பேசினர்.
இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை துறை துணை பேராசிரியர் கலையரசன் கடந்த 20 மாதங்களாக ஜிப்மரில் உடல் பருமனைக்குறைக்கும் அறுவை சிகிச்சைகள் லேபராஸ்கோப்பி (உடல்துளை) முறையில் வெற்றிகரமாக செய்யப்படுவது குறித்து எடுத்துரைத்தார்.
துணைப் பேராசிரியர் சந்தீப் சந்திரசேகர் நன்றி கூறினார்.
இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவர்கள், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
டிசம்பரில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
ஜிப்மர் மருத்துவமனையில் வரும் டிசம்பர் மாதம் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இயக்குநர் பரிஜா தெரிவித்துள்ளார்.