இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, புதுச்சேரி மாநில பாமக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி 1987 ஆம் ஆண்டு செப்.17-இல் நடந்த போராட்டத்தின்போது, 21 பேர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
அவர்கள் நினைவு தினம் ஆண்டுதோறும் வீரவணக்க நாளாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலர் கோபாலகிருஷணன் தலைமையில் உயிர்நீத்த தியாகிகளின் உருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நெட்டப்பாக்கம் எம்ஆர்எப் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் கல்மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் இளைஞரணி துணைச் செயலர் அன்பு, தொகுதிச் செயலர் சத்தியமூர்த்தி, வன்னியர் சங்க உறுப்பினர்கள் சிலம்பரசன், அரி, சரண்ராஜ், சபரிமுத்து ஆகியோர் 300 பேருக்கு அன்னதானம் வழங்கினர். ஊசுடு தொகுதியில் மாநில இளைஞரணிச் செயலர் ரமேஷ் தலைமையில் வன்னியர் சங்கம் கொடி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதே போல் அரியாங்குப்பம், தவளக்குப்பம் வில்லியனூர், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, ராஜ்பவன், கதிர்காமம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.