திருபுவனை அருகே தொழிலதிபர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துப்பு தருவோருக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருபுவனை சின்னபேட்டையைச் சேர்ந்தவர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வேலழகன். இவர், கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருபுவனை காவல் ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
எனினும், கொலை நிகழ்ந்து 4 நாள்களாகியும் கொலையாளிகள் யார் என்பது குறித்து எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கொலை வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம் பிறப்பித்தார்.
குற்றவாளிகள் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. ஆறுமுகம் செல்லிடப்பேசி எண்: 94432 56767, ஆய்வாளர் ஜிந்தா கோதண்டராமன் 94433 63739 என்ற எண்களில் தொடர்புகொண்டு கொலையாளிகள் குறித்த தகவலைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.