விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் அனைத்துக் கட்சிகள் சார்பில், வருகிற ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு மக்கள் ஒருங்கிணைப்பு இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாமோ.தமிழரசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கோரி, போராடி வருகின்றனர். நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்னைகளுக்காக புதுதில்லியில் போராடி வருகின்றனர்.
ஆனால், அவர்களைச் சந்திக்கக் கூட பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இதனைக் கண்டித்து, ஏப்ரல் 25-ஆம் தேதி புதுவையில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு மக்கள் ஒருங்கிணைப்பு இயக்கம் முழு ஆதரவு அளிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.