திருவண்டார்கோயில் அருகே மதுக் கடையை வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி புதுச்சேரியில் மொத்தம் 164 மதுக் கடைகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், சில பகுதிகளில் இன்னும் மதுக் கடைகள் அகற்றப்படவில்லை. குறிப்பாக பாகூர், திருபுவனை பகுதிகளில் சாலைகளில் தொடர்ந்து மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. ஏற்கெனவே பொதுமக்கள் சில இடங்களில் மதுக் கடைகளை சூறையாடி உள்ளனர். இந்த நிலையில், திருவாண்டார்கோயில் அருகே அமைக்கப்பட்ட புதிய சாராயக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மேலும், புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.