மது என நினைத்து, கரையான்பூச்சி மருந்தைக் குடித்த கொத்தனார் உயிரிழந்தார்.
பிள்ளைதோட்டம் நவீனா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (57) . கொத்தனார். இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததால், இவருக்கும் இவரது மணைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி காலை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் எழுந்த அவருக்கு மீண்டும் மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இதையடுத்து, வழக்கமாக மதுவை வைத்திருக்கும் இடத்தில் வந்து அங்கிருந்த மது பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். ஆனால், அதில் மதுவுக்குப் பதிலாக கரையான் மருந்தைக் குடும்பத்தினர் ஊற்றி வைத்துள்ளனர். இது தெரியாமல் அவர் அதைக் குடித்துள்ளார்.
இதில், மயக்கமடைந்த அவரை புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.