சமூக நலத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் வி. நாராயணசாமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அரசு அறிவித்த திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த துறை வாரியான கூட்டங்களை நடத்தி விவாதிக்க வேண்டும் என, முதல்வர் நாராயணசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி, சமூக நலத் துறையின் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, துறைச் செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நலத் துறையில் நிலுவையில் உள்ள திட்டங்கள், முக்கியத்துவம் தந்து நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதி குறித்து விவாதிக்கப்பட்டன.