கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ டி.பி.ஆர்.செல்வம் டிராக்டருடன் வந்து சட்டப்பேரவையை புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியை அடுத்த லிங்காரெட்டிபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. ஆலையை தனியாருக்கு விட அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதையொட்டி கருத்து கேட்புக் கூட்டம் பேரவை வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதையொட்டி லிங்காரெட்டிபாளையத்திலிருந்து, மண்ணாடிபட்டு தொகுதி எம்எல்ஏ செல்வத்துடன் டிராக்டரில் விவசாயிகள் வந்தனர். அப்போது அவர்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பேரவைக் கதவுகள் மூடப்பட்டன.
மேலும், போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது விவசாயிகள் மற்றும் எம்எல்ஏ செல்வம் கூறுகையில், கரும்பு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாக நிலுவைத் தொகை தரவில்லை. ஆலையை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக விவசாயிகள் மற்றும் ஊழியர்களுடன் கருத்து கேட்புக் கூட்டத்துக்கு வந்தோம் என்றார்.
அப்போது அமைச்சர் கந்தசாமி வந்தார். அவர் காரிலிருந்து இறங்கி விவசாயிகளுடன் பேசினார்.
அதையடுத்து அவரும் அந்த டிராக்டரில் ஏறி பேரவைக்குள் சென்றார். அதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.