புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நேரடியாக சேர்ந்த மாணவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் 50 சதவீத இடங்களைப் பெறவேண்டும். அந்த இடங்களை நீட் தரவரிசை அடிப்படையில் நிரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்பில் புதுவை அரசு ஒதுக்கீடாக 159 இடங்கள் பெறப்பட்டன.
அந்த இடங்களுக்கான சென்டாக் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், சீட் பெற்ற மாணவர்களை தனியார் கல்லூரிகள் சேர்க்க மறுத்தன. அதே சமயம், சென்டாக் மூலம் சேர்க்கை ஆணை பெறாத மாணவர்களிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு சேர்த்தன. இதுதொடர்பாக வழக்குரைஞர் மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
உயர் நீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி இந்த வழக்கை விரிவாக விசாரித்தது.
அதன் பேரில் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் சென்டாக் கலந்தாய்வில் இடம் பெறாமல் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அந்த மாணவர்களை இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் நகலை புதுச்சேரி அரசு, சுகாதாரத் துறை மற்றும் சென்டாக் சார்பில் மூத்த வழக்குரைஞர் காந்திராஜ், ஆளுநரின் தனிச் செயலர் சார்பில் வழக்குரைஞர் சீனிவாசன், லட்சுமிநாராயணா, மருத்துவக் கல்லூரி சார்பில் வழக்குரைஞர் குமரேஷ் பாபு, இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் ராமன், யுஜிசி சார்பில் வழக்குரைஞர் கோபிநாத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதேபோல, 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு வரும் 24-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.