புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 36.6 சதவீத எம்பிபிஎஸ் இடங்களையே அரசு பெற்றுள்ளதாக ஆளுநர் கிரண் பேடி குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மருத்துவக் கலந்தாய்வை ஒத்தி வைத்ததற்குப் பதில் தமிழகத்தைப் போல் குறைந்தது 50 சதவீத இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுவை அரசு பெற்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் 36.6 சதவீத இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
இதனால், புதுச்சேரி மாணவர்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி இருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது. குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் தேசிய ஒதுக்கீட்டுக்கு சென்று விட்டன. ஏராளமான இடங்களும் நிரம்பி உள்ளதாக இணையதளத்தில் தெரிய வருகிறது. மீதியுள்ள இடங்கள் மட்டுமே புதுவை மாநில ஒதுக்கீட்டுக்குக் கிடைக்கும்.
அதுவும் எவரும் இடங்களைத் தேர்வு செய்யவில்லை என்றால் மட்டுமே சாத்தியம். பொதுமக்களுக்கு சரியான தகவல்கள் சென்று சேரவேண்டும். அரசின் முக்கிய கடமைகளில் இதுவும் ஒன்றாகும். மக்களுக்கும் இதை அறியும் உரிமை உள்ளது என்றார் கிரண் பேடி.