பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி வேளாண்மை விற்பனைக்குழு ஊழியர் சங்கங்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் திங்கள்கிழமை அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.
நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் நடைபெற்றன.
2 முறை விற்பனைக்குழு நிர்வாகத்துடனும், வேளாண் செயலர், விற்பனைக் குழுத் தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதைக் கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 24-ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளவும், ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, திங்கள்கிழமை தட்டாஞ்சாவடியில் உள்ள விற்பனைக்குழு அலுவலகத்தில் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருள்கள் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.