புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகள் வசூலித்த அதிக கல்விக் கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
அந்தக் கட்சியின் பிரதேச குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் உலகநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம் உள்பட செயற்குழு மற்றும் பிரதேச குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்க வேண்டும். ஆனால், அதைப் பெறுவதற்கு மாறாக ஆண்டுதோறும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம், புதுச்சேரி அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது, பேச்சுவார்த்தை நடத்துவது போல நடத்தி, 30 முதல் 35 சதவீதம் வரையே இடங்களைப் பெறுகின்றது.
இது முற்றிலும், புதுச்சேரி மாநில ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானதும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவான நடவடிக்கையாகும். அப்படி 50 சதவீத இடங்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது புதுச்சேரி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழ் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 50 சதவீத இடங்களைப் பெற்றது போல எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளிடமிருந்து 50 சதவீத இடங்களைப் பெற வேண்டும். மேலும், அரசு தீர்மானிக்கும் கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும்.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகள் எந்தவித வரைமுறையும் இல்லாமல், பெற்றோர்களிடமிருந்து கல்விக் கட்டணத்தை கொள்ளையடித்து வருகின்றன.
நிகழ் ஆண்டு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என அரசு கூறி வந்தது. ஆனால் அரசின் நடவடிக்கைளுக்கு மாறாக, தனியார் கல்வி நிறுவனங்கள் பெருந்தொகை வசூலித்துள்ளன. அரசு கல்விக் கட்டணக் குழுவின் முடிவுகளுக்கு மாறாக, வரைமுறையின்றி பெற்றோர்களிடம் கல்விக் கட்டண வசூலித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களிடம் பெற்ற கூடுதல் கட்டணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.