புதுவையில் முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் பாலாஜி (26). இவர், புதுவை பல்கலை.யில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் பரத்துக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், பாலாஜி சனிக்கிழமை நடந்து வந்தபோது பரத்தை பார்த்து முறைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது பரத்துக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் யுவராஜ், ராஜபாண்டியன் ஆகியோர் பாலாஜியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாலாஜி காயமடைந்தாராம். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பரத் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.