புதுச்சேரி ராஜ் நிவாஸ் (ஆளுநர் மாளிகை) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யோகா நிவாஸாக இயங்கும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை கிரண் பேடி தலைமையில் யோகாசன செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஸ்டான்போர்டு, விவேகானந்தா பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈஷா யோகா மையம் சார்பில் அதன் பயிற்சியாளர்கள் ஆளுநர் மாளிகையில் யோகாசனம் கற்பிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
புதுச்சேரி மக்களுக்கு யோகாசனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திங்கள்கிழமை முதல் யோகாசன செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை குழந்தைகளுக்கும், 21-ஆம் தேதி புதன்கிழமை பெண்களுக்கும் யோகாசன செயல்விளக்கம் அளிக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 மணிக்கு யோகாசன செயல்விளக்கம் அளிக்கப்படும். இந்த நடைமுறை ஆண்டு முழுவதும் தொடரும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் அதிகாலை 5.45 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆஜராக வேண்டும்.
முதலில் வரும் 100 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கிரண் பேடி தெரிவித்தார்.