புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகத்துக்கான 10 வார பயிற்சி முகாம் கரையாம்புத்தூர் கிராமத்தில் புதன்கிழமை தொடங்கியது.
விவசாயிகள், நெல் பயிரில் திருந்திய நெல் சாகுபடி மூலம் பயிர் சாகுபடி செய்து, பூச்சி மற்றும் நோய்களை நிர்வகிக்கும் பொருட்டு, ரசாயன தன்மையற்ற, சுற்றுப்புறச் சூழல் சார்ந்த உயிர்ரக, தாவர பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு செலவினங்களை குறைப்பதுடன், அதிக மகசூல் எடுப்பதற்காக பல நவீன தொழில்நுட்பங்களை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், மணமேடு, கடுவனூர், பனையடிக்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த 30 விவசாயிகள், விவசாய மகளிருக்கு பத்து வார காலப் பயிற்சி வயலில் அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியை முதன்மைப் பயிற்றுநர் மற்றும் பூச்சியியல் நிபுணர் என்.விஜயகுமார் 10 வாரங்களுக்கு அளிக்கவுள்ளார்.
அதன்படி, உழவர் வயல்வெளிப் பள்ளியின் தொடக்க விழா, கரையாம்புத்தூரில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகாந்தி தொடக்கவுரையாற்றினார்.
முன்னதாக, வேளாண் துறை கூடுதல் இயக்குநர் பி.ரவிப்பிரகாசம் வாழ்த்திப் பேசினார்.
பூச்சியியல் நிபுணர் விஜயகுமார் வரவேற்றார். இளநிலை மரபியலர் முனைவர். இரா. நரசிம்மன் நன்றி கூறினார்.