திருபுவனை தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் மாநிலச் செயலாளர் கோ.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை: என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான வேலழகன் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த திருபுவனை போலீஸார் ஆரம்பம் முதலே குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளியான உதயகுமாரை காப்பாற்ற முயற்சித்த காரணத்திற்காக காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், இந்தக் கொலை வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த திருபுவனை காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கொலை வழக்கில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இதுவரை அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை புதுச்சேரி போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.