கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் நோனாங்குப்பம், ஊசுட்டேரி படகுக் குழாம், சீகல்ஸ், லே-கபே உள்ளிட்ட உணவகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் தனியார் முதலீட்டை புகுத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஊழியர்கள் தனியார் முதலீட்டைப் புகுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, கடற்கரைச் சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தனியார் மயமாக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என மேலாண் இயக்குநர் முருகேசன் உறுதி அளித்தார், இதனிடையே அதன் தலைவர் பாலனும் தனியார் மயமாக்கப்படாது என உறுதி கூறினார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஏற்கெனவே அரசு சார்பில் கோரப்பட்டிருந்த ஒப்பந்தப் புள்ளியைப் பிரித்து, தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பதாக சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் அலுவலகம் எதிரே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதனால், சீகல்ஸ், லே-கபே படகுக் குழாம் ஆகியவை இயங்கவில்லை.