புதுச்சேரி நகைக் கடையில் 4-ஆவது நாளாக சோதனை

புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக் கடையில் 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக் கடையில் 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த 9-ஆம் தேதிமுதல் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சசிகலா, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில் அருகேயுள்ள பொம்மையார்பாளையத்தில் டி.டி.வி.தினகரனின் பண்ணை வீட்டிலும் தீவிர சோதனை  நடைபெற்றது. அங்குள்ள ஓர் அறையை மட்டும் அதிகாரிகள் சீல் வைத்துவிட்டு, சோதனையை முடித்தனர்.
அதேநேரம்,  புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த 9-ஆம் தேதி காலை வருமான வரித் துறையினர் தங்களது சோதனையை தொடங்கினர். அது நான்காவது நாளாகவும் தொடர்ந்தது.
புதுச்சேரியில் உள்ள அந்தக் குழுமத்தின் தலைமை அலுவலகம், நட்சத்திர விடுதி உள்ளிட்ட 4 இடங்களிலும், அந்த நிறுவனத்தின் கிளைகள் அமைந்துள்ள காரைக்கால், சிதம்பரத்திலும் சோதனைகள் நடைபெற்றன.
இந்தச் சோதனையின் போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. அந்த நிறுவனத்தின் மேலாளர் தென்னரசுவின் கடலூர் வீட்டிலும் இரண்டு நாள்களாக சோதனை நடத்திய பின்னர், தென்னரசுவை புதுச்சேரிக்கு அழைத்து வந்த அதிகாரிகள் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.
மேலும், இந்தச் சோதனைக்கும் டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனைக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 9-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள டி.டி.வி.தினகரனின் பண்ணை வீட்டில் சோதனை நடத்திய அதே அதிகாரிகள்தான் நகைக் கடை, அதன் குழுமங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, வருமான வரித் துறை துணை ஆணையர் கண்ணன் தலைமையில் 20 அதிகாரிகள் பங்கேற்ற இந்தச் சோதனை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. பின்னர் மாலையில் கடை திறக்கப்பட்டது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com