புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து, ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
ஜிப்மர் நிர்வாகத்தில் சுமார் 140 ஒப்பந்த பாதுகாவலர்கள் (பெண்கள்) பணிபுரிந்து வந்தனர். ஒவ்வொருவரும் 4 முதல் 9 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மே 1-ஆம் தேதி நிர்வாகம் அவர்களை பணியை விட்டு நீக்கி விட்டது. இதைக் கண்டித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும், இதுதொடர்பாக இயக்குநருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் முதல் கட்டமாக 20 பெண்களுக்கு வேலை வழங்க ஒப்புக் கொண்டனர்.
ஆனால், இதுவரை அவர்களுக்கு வேலை தராமல் நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது.
இதைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனே வேலை தர வலியுறுத்தியும், ஏஐடியுசி மாநிலக்குழு சார்பில் இயக்குநர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
மாநிலச் செயலாளர் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் விஎஸ்.அபிஷேகம் சிறப்புரை ஆற்றினார். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதலில் நிர்வாக அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். உள்ளே செல்ல அனுமதி இல்லை என போலீஸார் கூறியதால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிர்வாக அலுவலகத்தின் மாடத்திலேயே போராட்டக்காரர்கள் அமர்ந்தனர். இதனால் 70-க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், போராட்டக் குழுவினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அங்கேயே காத்திருந்தனர்.