அக்டோபர் மாத ஊதியத்தை வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்து, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆர்டிசி) ஊழியர்கள் சனிக்கிழமை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பிற மாநிலங்களுக்கு 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 1050 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை மாதத்தின் முதல்நாளான 1-ஆம் தேதி ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
அண்மைக்காலமாக 5, 7-ஆம் தேதிகளில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த அக்டோபர் மாத ஊதியம் புதுச்சேரியைச் சேர்ந்த நிரந்தர ஊழியர்களுக்கு 11-ஆம் தேதி வழங்கப்பட்டது. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.
புதுச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து, மாநிலத்தில் 650 ஊழியர்கள் சனிக்கிழமை திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளை இயக்காமல் பணிமனையிலேயே நிறுத்தி விட்டனர். பல்வேறு ஊர்களுக்குச் சென்ற பேருந்துகளில், பயணிகளை இறக்கி விட்டு பேருந்துகளை மீண்டும் பணிமனைக்கு ஓட்டி வந்து நிறுத்தினர்.
மாதம்தோறும் 1-ஆம் தேதி ஊதியம் வழங்க ஏதுவாக தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.