புதுச்சேரியில் அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா (27). இவர், கிழக்கு கடற்கரை சாலை அருகே அழகு நிலையம் நடத்தி வருகிறார். புதன்கிழமை 4 பேர் கொண்ட கும்பல் அழகு நிலையத்துக்கு வந்து தங்களுக்கு முகப்பொலிவு செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு சோபனா ஆயுத பூஜை செய்ய உள்ளதால் மறுநாள் வந்து செய்து கொள்ளும்படி கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்லிடப்பேசி, ரூ. 800 பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து சோபனா கோரிமேடு போலீஸார் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், புதுச்சேரி வினோபா நகரைச் சேர்ந்த இளம்பிறை (23), லாஸ்பேட்டை பார்த்திபன் (29), கிருணா நகரைச் சேர்ந்த ஆகாஷ் (25) மற்றும் ஒருவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இளம்பிறை, பார்த்திபன், ஆகாஷ் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, 2 செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.