புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுப்பிய தீபாவளி பரிசுப் பொருள்களை அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது; தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கு முதல்வர் நாராயணசாமி பரிசுப் பொருள்களை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
பலர் இந்த பரிசுப் பொருள்களை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் எனக்கு (கிரண் பேடி) அனுப்பிய குறுஞ்செய்தியில், முதல்வர் நாராயணசாமி தனக்கு அனுப்பிய தீபாவளி பரிசுப் பொருள்களை திருப்பி அனுப்பிவிட்டதாகவும், தன்னைப் போல மற்ற அதிகாரிகளும் பரிசுப் பொருள்களை ஏற்கவில்லை என்றும் இந்த பணத்தை ஏழைகளுக்காக செலவு செய்தால் அவர்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார் ஆளுநர் கிரண் பேடி.
யாரிடமும் அதிகாரிகள் பரிசுப் பொருள்கள் பெறக் கூடாது. அவ்வாறு பெற்றால் அது குற்றமாகக் கருதப்படும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசு அதிகாரிகளுக்கு இரு நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.