புதுச்சேரியில் பட்டப்பகலில் பல் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர் 8-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு (49). பல் மருத்துவரான இவர் பாரதி வீதியில் கிளினிக் வைத்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை தங்கவேலு தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.
பின்னர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் கட்டில் கீழ் வைத்திருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பெரியக்கடை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.