அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, அதிமுக, திமுகவினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் புதுச்சேரி அரசின் செய்தி - விளம்பரத் துறை சார்பில், கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் திமுகவினர் பேரணியாக வந்து அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பில் கோவிந்த சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அண்ணா பிறந்த நாள் விழாவில், அமைப்பாளர் இரா. சிவா கலந்துகொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அவைத் தலைவர் சீத்தா வேதநாயகம், கட்சியின் மாநிலத் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமாரவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் கொண்டாடப்பட்ட அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் உருவப் படத்துக்கும், அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், சுப்பையா சாலை, காந்தி வீதி, புஸ்ஸி வீதி வழியாகப் பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, பாண்டுரங்கன், சுத்துக்கேணி பாஸ்கர், நகரச் செயலர்கள் ரவீந்திரன், அன்பானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல, புதிய நீதிக் கட்சித் தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் அந்தக் கட்சியைச் சேர்ந்கவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.