பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பிய கைதியிடம் செல்லிடப்பேசி, சார்ஜரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புதுவை சின்னவாய்க்கால் வீதியைச் சேர்ந்த ராஜாராம், அவரது மகன் ரஜினி ஆகியோர் கடந்த 2008 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான முதலியார்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் ராஜாவுக்கு (30) புதுவை குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து பெருமாள் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றமும் ஆயுள்தண்டனையை உறுதி செய்தது.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெருமாள் ராஜா தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, கடந்த 7 -ஆம் தேதி சிறையில் இருந்து பரோலில் சென்றார். கடந்த 12-ஆம் தேதி சிறை செல்ல வேண்டிய அவர் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு புதுவை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பெருமாள் ராஜா வியாழக்கிழமை தனது குடும்பத்தினருடன் சிறைக்குச் சென்றார். சிறையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் அணிந்திருந்த காலனியைக் கழற்றிச் சோதனை செய்தபோது, அதில் செல்லிடப்பேசி, சார்ஜர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறைத்துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் காலாப்பட்டு காவல் நிலையததில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.