புதுவையில் சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை இயக்குநர் மன்சூர் தெரிவித்தார்.
புதுவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உள்ளாட்சித் துறை இயக்குநர் மன்சூர் பேசியதாவது:
புதுவையில் பாலித்தீன் பைகள், டீ கப்புகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், டீ கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதற்கான கட்டணம் ரூ.100 வசூலிக்க உள்ளோம்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் ரூ.200 விதிக்கப்படும்.
மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், புதுச்சேரியில் எந்தெந்த சாலைகளில் சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்யலாம், எந்தெந்த சாலைகளில் விற்பனை செய்யக்கூடாது, எந்தெந்த சாலைகளில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்யலாம் என்பதை அடையாளம் கண்டு வருகிறோம்.
புதுச்சேரியில் சுமார் 6,500 தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க உள்ளோம். அவர்களது அடையாள அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.
மேலும், அடையாள அட்டையில் சாலையோர வியாபாரிகளின் செல்லிடப்பேசி எண்ணும் இடம் பெற்றிருக்கும். இந்த மாத இறுதியில் இப்பணிகள் முடிவடைந்து அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.