உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நீர் கிடைத்தால், காரைக்காலில் விவசாயம் செழிக்கும் என்று வேளாண் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கடந்த 1970-களில் கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் முழுமையாக வந்த போது, 20 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. தொடர்ந்து, நீர் வராததால் விவசாய நிலங்கள் சுருங்கி, தற்போது 6 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்றாலும், விவசாயம் சார்ந்த பணிகள் பறிபோனது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7 டி.எம்.சி. காவிரி நீர் உரிய காலத்தில் கிடைத்தால், காரைக்காலில் விவசாயம் செழிக்கும் என்றார் அவர்.