புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் ரசாயன மருந்து உற்பத்தி ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக அமைப்புகள் அறிவித்தன.
காலாப்பட்டில் இந்த ஆலை 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஆலையில் மாத்திரை தயாரிப்புக்கான ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் இருந்து கழிவுநீர் ராட்சத குழாய் மூலம் கடலில் கலக்கப்பட்டு வந்தது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அதை மறுசுழற்சி செய்து வெளியில் விடுவதாக ஆலை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த ஆலையில் மேலும் இரு மடங்கு உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக தமிழர்களம் உள்பட 20-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் புதுச்சேரியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில் இந்த ஆலையில் தற்போது 4,900 டன் ரசாயனம் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை இரு மடங்கு உயர்த்த புதுவை அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என சமூக அமைப்புகள் அறிவித்தன.