புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.
புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வை நகர் 20-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனஞ்செயன். புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வராக உள்ளார். இவரது மகன் அமெரிக்காவில் இருந்து அண்மையில் விடுமுறைக்காக புதுச்சேரிக்கு வந்தார். விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.
மகனை வழியனுப்ப, தனஞ்செயன் தனது குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் சென்றார்.
அங்கிருந்து புதுச்சேரிக்கு மதியம் திரும்பினார். அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் பொருள்கள் சிதறிக் கடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தனஞ்செயன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் வழக்குப் பதிந்தார்.
இதுதொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.