மாணவிகளுக்கு தவறாக வழிகாட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பேராசிரியை நிர்மலா பற்றி கட்செவி அஞ்சலில் விவாதம் நடத்தியதில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு கேமன் நகரைச் சேர்ந்தவர் சதிஷ்குமார் (25).
ஜிப்மர் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இதேபோல, தேங்காய்த்திட்டு திலகர் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (33). நைனார்மண்டபத்தில் உணவகம் நடத்தி வருகிறார். இருவரும் கட்செவி அஞ்சல் குழுவில் உள்ளனர்.
அந்தக் குழுவில் பேராசிரியை நிர்மலா குறித்து உரையாடல் தொடங்கியுள்ளது.
அப்போது, இருவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்ததாகத் தெரிகிறது. இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தேங்காய்த்திட்டு வேம்படியம்மன் கோயில் அருகே சதிஷ்குமார் சென்றபோது, எதிரே வந்த சிவக்குமார் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சிவக்குமார், சதிஷ்குமாரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார்.
இதேபோல, சதிஷ்குமாரும் சிவகுமாரைத் தாக்கியுள்ளார்.
இதில், காயமடைந்த இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இருவரும் தனித் தனியாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், காவல் உதவித் துணை ஆய்வாளர் சேகர் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.