புதுச்சேரிக்கு பிப்.24-ஆம் தேதி வரும் பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.விசுவநாதன் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
எந்த மாநிலத்துக்கும் குடியரசுத் தலைவர், பிரதமர் சென்றாலும் அந்த மாநிலத்தின் முதல்வர்களை சந்திப்பது மரபு. இது நீண்ட காலமாக உள்ளது. அந்த வகையில், புதுச்சேரி வரவுள்ள பிரதமர் மோடி முதல்வர் நாராயணசாமியை சந்தித்துப் பேச வேண்டும். அதற்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கித் தர வேண்டும்.
முதல்வர் நாராயணசாமி நேரம் ஒதுக்கித் தர கேட்டும் இதுவரை பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கித் தராதது அரசியல் காழ்ப்புணர்வை காட்டுகிறது.
இது ஏதேச்சதிகார நடவடிக்கை. பிரதமரை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் நேரம் ஒதுக்கித் தர கேட்டுக்கொண்டுள்ளது.
முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்திப்பதுடன் பார்க்க விரும்பும் கட்சித் தலைவர்களையும் பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்கிக்கொடுத்து பார்க்க வேண்டும் என்றார்.