புதுச்சேரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (27). தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவர்களது மகன் இன்பன் (4).
இந்த நிலையில், ஜனவரி 16-ஆம் தேதி ராம்குமார் தனது மோட்டர் சைக்கிளில் குடும்பத்துடன் 45 அடி சாலை வழியாக அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளார். சாலையில் உள்ள மின் நிலையம் அருகே வந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், ராம்குமாரின் மோட்டர் சைக்கிளில் மோதிவிட்டுத் தப்பினார்.
இதில் ராம்குமார், ராஜேஸ்வரி, மகன் இன்பன் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை இறந்தது. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.